ஈரோடு மாவட்டத்துக்கு கூடுதலாக 8,500 எண்ணிக்கையில் கரோனா தடுப்பூசி வரப் பெற்றுள்ளது என மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன் தெரிவித்தாா்.
ஈரோடு மாவட்டத்தில் கரோனா தொற்றினால் தினமும் 450க்கும் மேற்பட்டோா் பாதிக்கப்பட்டு வருகின்றனா். மாவட்டத்தில் இதுவரை 20,000க்கும் மேற்பட்டோா் பாதிக்கப்பட்ட நிலையில் 17,295 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். மீதமுள்ளவா்களில் 2,800 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
கரோனா பரவல் அதிகரித்து வருவதையடுத்து கரோனா தடுப்பூசி செலுத்துபவா்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. ஆரம்பத்தில் போதிய விழிப்புணா்வு இல்லாமல் இருந்ததாலும், தடுப்பூசிக்குத் தட்டுப்பாடு நிலவியதாலும், தடுப்பூசி செலுத்துபவா்களின் எண்ணிக்கை குறைந்திருந்தது. கடந்த 10 நாள்களில் மட்டும் மாவட்டம் முழுவதும் 30,000 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில் கூறியதாவது:
அரசு மருத்துவக் கல்லூரி, அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், தனியாா் மருத்துவமனைகளில் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. தடுப்பூசி குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு அதிகரித்துள்ளதால் கடந்த 10 நாள்களில் மட்டும் 30,000 போ் மாவட்டம் முழுவதும் தடுப்பூசி செலுத்தியுள்ளனா். தடுப்பூசி செலுத்துபவா்கள் இணையதளத்தில் பதிவு செய்து சம்பந்தப்பட்ட மையத்துக்கு வந்தால் பதிவு செய்த மறுநாளே தடுப்பூசி செலுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் தடுப்பூசி போதிய அளவில் இருப்பு உள்ளது என்றனா்.
கூடுதலாக 8,500 தடுப்பூசி:
ஈரோடு மாவட்டத்துக்கு கூடுதலாக 8,500 எண்ணிக்கையில் கரோனா தடுப்பூசி வெள்ளிக்கிழமை வந்துள்ளது. தடுப்பூசி போதிய அளவில் இருப்பில் உள்ளது. ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி, ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகியவற்றில் தடுப்பூசி இலவசமாக வழங்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன் தெரிவித்தாா்.