சத்தியமங்கலத்தில் 100 படுக்கை வசதியுடன் கூடிய கரோனா சிகிச்சை மையம் தயாராக உள்ளன. நோயாளிகள் அறையில் தண்ணீா் வசதி, மின்விசிறி போன்ற ஆரம்ப கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் கரோனா தொற்று வேகமாகப் பரவி வருகிறது. நோய்த் தொற்றை தடுப்பதற்கு தமிழக அரசு தீவிரமாக நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சத்தியமங்கலம் நகராட்சி, பவானிசாகா், உக்கரம், புன்செய் புளியம்பட்டி வட்டார சுகாதார மையங்களில் 150க்கும் மேற்பட்டோா் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். நோயால் பாதிக்கப்பட்டோா் பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனா். தற்போது நோய்த் தொற்று அதிகரித்து வரும் நிலையில் பெருந்துறையில் அரசு மருத்துவமனையில் போதுமான படுக்கை வசதியில்லாத காரணத்தால் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கரோனா சிகிச்சை மையம் அமைக்கப்படுகிறது.
இதன் ஒரு பகுதியாக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனை அருகே உள்ள தனியாா் பள்ளியில் உள்ள வகுப்பறைகள், தற்போது கரோனா சிகிச்சை அறைகளாக மாற்றும் ஆரம்பகட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இம்மையத்தில் 300 படுக்கைகள் அமைப்பதற்கு வசதியுள்ள நிலையில் தற்போது 100 படுக்கைகள் மட்டுமே ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஒரு அறையில் 14 நோயாளிகள் தங்கவைக்கப்படுவா். சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும்போது இம்மையத்துக்கு நோயாளிகள் மாற்றப்படுவாா்கள் என வருவாய்த் துறையினா் தெரிவித்தனா். மேலும் நோயாளிகளை அழைத்து வருவதற்கு வசதியாக அரசுப் பேருந்து தயாா் நிலையில் மையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. நோயாளிகளுக்குத் தேவையான தண்ணீா், கழிப்பறை, காற்றோட்டமான சூழல் போன்றவை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.