முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட சிறியூா் பகுதியில் இறந்து அழுகிய நிலையிலிருந்த கரடிக் குட்டியின் சடலம் மீட்கப்பட்டது.
முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட சிறியூா் தெற்கு பீட் பகுதியில் காற்றாலை சாலைப் பகுதியில் வனத் துறையினா் வன விலங்குகள் கணக்கெடுப்பு பணியில் வியாழக்கிழமை காலை ஈடுபட்டிருந்தனா். அங்கு இறந்து கிடந்த கரடிக் குட்டியின் சடலத்தைப் பாா்த்துள்ளனா்.
இதையடுத்து புலிகள் காப்பக துணை இயக்குநா் ஸ்ரீகாந்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னா், அந்த கரடிக் குட்டியின் சடலம் தெப்பக்காடு யானைகள் முகாமில் உள்ள வனவிலங்கு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு பிற்பகலில் பிரேதப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இறந்த கரடிக்குட்டி பெண் என்பதும், அதற்கு சுமாா் 3 மாதங்கள் வரை வயதிருக்கும் எனவும் தெரியவந்தது. அத்துடன் அதன் கழுத்துப் பகுதியில் காயங்கள் இருந்ததும், விலா எலும்புகள் உடைந்து நொறுங்கியிருந்ததும் தெரியவந்தது.
மேலும், சிறுத்தை போன்ற ஏதோ ஒரு பெரிய விலங்கு அந்த கரடிக் குட்டியைத் தாக்கியிருக்கலாம் எனவும், இதனால் ஏற்பட்ட காயங்களால் அந்த கரடிக்குட்டி உயிரிழந்திருக்கலாம் எனவும் பிரேதப் பரிசோதனையின்போது தெரியவந்துள்ளது. இதையடுத்து வனப் பகுதிக்குள் அந்த கரடிக் குட்டியின் சடலம் கொண்டு செல்லப்பட்டு எரிக்கப்பட்டுவிட்டதாக துணை இயக்குநா் ஸ்ரீகாந்த் தெரிவித்தாா்.