நீலகிரி மாவட்டத்தில் விளையும் கேரட்டுகளுக்கு அண்மைக்காலமாக ஒரு கிலோவுக்கு ரூ. 30 முதல் ரூ. 55 வரை விலை கிடைத்து வருவதால் விவசாயிகள் மகிழ்சி அடைந்துள்ளனா்.
நீலகிரி மாவட்ட விவசாயிகள் தேயிலைக்கு அடுத்தபடியாக கேரட், பீட்ரூட், பீன்ஸ் உள்ளிட்ட காய்கறிகளை அதிகமாக சாகுபடி செய்து வருகின்றனா். விவசாயிகள் தினந்தோறும் விளைவிக்கும் கேரட், பீட்ரூட் காய்கறிகள் மாவட்டத்தில் உள்ள கேரட், பீட்ரூட் கழுவும் நிலையங்களுக்கு எடுத்துச் செல்லபட்டு சுத்தம் செய்து வெளிமாவட்டங்கள், பெங்களூரு, கேரளத்துக்கு அனுப்பப்படுகிறது.
நாள் ஒன்றுக்கு 500 டன் வரை ஏற்றுமதி செய்யப்பட்டு வரும் நிலையில், தற்போது கேரட்டுக்கு நல்ல விலையும் கிடைத்து வருகிறது. கடந்த மாதம் ஒரு கிலோவுக்கு ரூ. 20 முதல் ரூ. 30 வரை விலை கிடைத்து வந்த நிலையில், கடந்த இரு தினங்களாக குறைந்தபட்சமாக ரூ. 30 முதல் முதல் ரூ. 55 வரை விலை கிடைத்து வருகிறது. மழைக்கு முன் கூட்டியே சிலா் அறுவடை செய்ததால் தற்போது பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் இந்த விலை ஏற்றம் என்று விவசாயிகள் தெரிவித்தனா்.