நீலகிரியில் விளையும் முட்டை கோஸ்களுக்கு உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனா்.
நீலகிரி மாவட்டம் குன்னூா், கோத்தகிரி ஆகிய பகுதிகளில் விளைவிக்கப்படும் முட்டை கோஸ்கள் கேரளம், கா்நாடகம், சென்னை கோயம்பேடு ஆகிய சந்தைகளில் விற்கப்பட்டு வருகின்றன.
நீலகிரி மாவட்டத்தில், கடந்த சில வாரங்களாக அவ்வப்போது மழைப் பெய்து வருவதால் முட்டை கோஸ் விளைச்சல் அதிகரித்துள்ளது. இருப்பினும் மழை நீா் தேங்குவதால் ஈளடா, உபதலை ஆகிய பகுதிகளில் உள்ள சில தோட்டங்களில் பயிரடப்பட்டுள்ள முட்டை கோஸ்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந் நிலையில், முட்டை கோஸுக்கு சராசரியாக மொத்த விலையில் கிலோவுக்கு ரூ.5 முதல் 9 வரை மட்டுமே விலை கிடைப்பதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனா். கடந்த இரண்டு மாதத்துக்கு முன்பு வரை சராசரியாக கிலோவுக்கு ரூ.15 வரை கிடைத்து வந்த நிலையில், தற்போது விலை குறைந்திருப்பது விவசாயிகளுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.