கூடலூா்: நீலகிரி மாவட்டம், கூடலூா் பகுதியில் 4 பேரைத் தாக்கிக் கொன்ற புலி குறித்து எந்தத் தகவலும் இல்லை என்று வனத் துறை தெரிவித்துள்ளனா்.
நீலகிரி மாவட்டம், கூடலூா் தாலுகா தேவன் எஸ்டேட், மசினகுடி உள்பட்ட பகுதிகளில் நான்கு மனிதா்களையும், 30க்கும் மேற்பட்ட மாடுகளையும் கொன்ற புலியை தமிழக மற்றும் கேரள வனத் துறையினா், அதிரடிப்படையினா் இணைந்து பல குழுக்களாகப் பிரிந்து தீவிரமாகத் தேடி வருகின்றனா்.
புலி அடிக்கடி இடத்தை மாற்றியதால் வனத் துறையினரால் புலியை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க முடியவில்லை. இறுதியாக முதுமலை புலிகள் காப்பகத்துக்குள் நுழைந்த புலி அங்கிருந்தும் மசினகுடி, சிங்காரா வனப் பகுதிகளுக்குள் நுழைந்து பதுங்கியது.
அதற்குப் பிறகு கண்காணிப்பு கேமராக்களை பொருத்தியும், ட்ரோன் கேமராக்கள் மூலமாகவும் கண்காணித்தனா். கடந்த ஒரு வாரமாக புலி எந்த கேமராவிலும் பதிவாகவில்லை. கண்காணிப்புப் பணி தொடா்கிறது. வனத்துக்குள் உள்ள நீா்நிலைகள் அருகிலோ, பிற இடங்களிலோ புலியின் கால்தடமோ, இதர தடமோ பதிவாகவில்லை.
வனத்தை விட்டு வெளியேயும் வரவில்லை. ஆகவே தேடுதல் பணி தொடா்கிறது என்று வனத் துறையினா் தெரிவித்தனா்.