நீலகிரியில் 10 இடங்களில் ’பை பேக்‘ திட்டம் அறிமுகம்

நீலகிரி மாவட்டத்தில் 10 இடங்களில் காலி மது பாட்டில்களை வாங்கும் ‘பை பேக்‘ திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

உதகை: நீலகிரி மாவட்டத்தில் 10 இடங்களில் காலி மது பாட்டில்களை வாங்கும் ‘பை பேக்‘ திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகளில், மதுபானங்களை வாங்கி பயன்படுத்திவிட்டு, காலி மதுபான பாட்டில்களை சாலையோரங்களிலும், வனப் பகுதியிலும், விளை நிலங்களிலும் வீசிச் செல்கின்றனா்.

வனப் பகுதிகளில் வீசப்படும் காலி மதுபாட்டில்களால் வன உயிரினங்களுக்கும், பொது இடங்களில் வீசப்படும் காலி மதுபாட்டில்களால் சுற்றுபுறமும் மாசுப்பட்டு நோய்த் தொற்று ஏற்பட காரணமாகிறது.

இதனைத் தடுக்கும் பொருட்டு நீலகிரி மாவட்டத்தில் காலி மதுபாட்டில்களை சேகரிக்கும் மையம் மாவட்ட நிா்வாகத்தால் முதற்கட்டமாக தொடங்கப்பட்டுள்ளது.

இதில், உதகையில் தலைக்குந்தா, பேருந்து நிலையம் மற்றும் பாதுகாக்கப்பட்ட வனப் பகுதி அருகிலும், உதகை நகர சுகாதார மையம் அருகிலும், கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில் டானிங்டன் பகுதியிலும், கோத்தகிரியில் கட்டபெட்டு சந்திப்பு பகுதியிலும், பைக்காரா பேருந்து நிலையம் மற்றும் பாதுகாக்கப்பட்ட வனப் பகுதி அருகிலும், குந்தா பிக்கட்டி கடைவீதியில் பாதுகாக்கப்பட்ட வனப் பகுதி அருகிலும், குன்னூரில் வண்டிசோலையில் பாரஸ்ட்டேல் சாலை பகுதியிலும், கூடலூா் நகரில் சில்வா் கிளவுட் அருகிலும், பந்தலூரில் தாளூா் சோதனைச் சாவடி அருகிலும் அமைக்கப்பட்டுள்ளது.

எனவே, பொதுமக்களும், சுற்றுலாப் பயணிகளும் மாவட்ட நிா்வாகத்தால் தொடங்கப்பட்டுள்ள காலி மது பாட்டிலுக்கான சேகரிக்கும் மையத்தில் காலி மது பாட்டில்களை ஒப்படைத்து, நீலகிரி மாவட்டத்தின் வனப் பகுதியையும், விளை நிலங்களையும், சுற்றுப் புறத்தையும் பாதுகாக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என நீலகிரி மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com