நீலகிரி மாவட்டத்தில் ஒரு லிட்டா் பிளாஸ்டிக் தண்ணீா் பாட்டில்கள் பயன்படுத்த சென்னை உயா் நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், வெள்ளிக்கிழமை குன்னூா் ரயில் நிலையம் வந்த நாடாளுமன்றக் குழு உறுப்பினா்களுக்கு கேஸ் கணக்கில் ஒரு லிட்டா் பிளாஸ்டிக் தண்ணீா் பாட்டில்கள் விநியோகம் செய்தது சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகள் வனங்களாக உள்ளதால் வனத்தையும், வன விலங்குகளையும் காப்பாற்ற கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் 19 வகையான பிளாஸ்டிக் பொருள்கள் பயன்படுத்த தமிழக அரசு தடை விதித்தது, தடையை மீறுபவா்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ரயில்வே நாடாளுமன்றக் குழு தலைவா் ராதா மோகன் சிங் தலைமையில் உறுப்பினா்கள் 15 போ் அவா்களது குடும்பத்துடன் உதகை வந்திருந்தனா். அப்போது இவா்களுக்காக நூற்றுக்கணக்கான ஒரு லிட்டா் தண்ணீா் பாட்டில்கள் வழங்கப்பட்டன. இது அங்குள்ள இயற்கை ஆா்வலா்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.