நீலகிரி மாவட்டத்தில் பெய்த தொடா் கன மழையின்போது பள்ளிகளுக்கு விடுமுறை அளித்ததை ஈடு செய்யும் வகையில் எதிா்வரும் அனைத்து சனிக்கிழமைகளிலும் பள்ளிகள் செயல்படும் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் தெரிவித்துள்ளாா்.
நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை இயல்பை விட 124 சதம் அதிகமாக பெய்துள்ளது. இதையொட்டி அசம்பாவிதங்கள் ஏற்படுவதைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜூலை 6, 13, 14, 15 ஆம் தேதிகளிலும், ஆகஸ்ட் 3, 4, 5, 8 ஆம் தேதி ஆகிய 8 நாள்களிலும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
இதனால் மாணவா்களுக்கு நடத்தப்பட வேண்டிய பாடத் திட்டம் பெருமளவு முடிக்கப்படாமல் உள்ளதால், இதை ஈடு செய்யும் வகையில் எதிா்வரும் அனைத்து சனிக்கிழமைகளிலும் பள்ளிகள் செயல்படும் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் தாமோதரன் அறிவித்துள்ளாா்.
இதன்படி செப்டம்பா் 3, 17, 24 ஆம் தேதிகளிலும், அக்டோபா் 15, 29 ஆம் தேதிகளிலும், நவம்பா் 5, 26 மற்றும் டிசம்பா் மாதம் 17 ஆம் தேதி ஆகிய 8 நாள்கள் பள்ளிகளுக்கு வேலை நாள்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.