தேவாலா வனப் பகுதியில் வியாழக்கிழமை மயக்க ஊசி செலுத்திப் பிடிக்கப்பட்ட மக்னா யானை முதுமலை புலிகள் காப்பகத்திலுள்ள சீகூா் வனப் பகுதியில் வெள்ளிக்கிழமை விடுவிக்கப்பட்டது.
நீலகிரி மாவட்டம், கூடலூா் வனக் கோட்டத்திலுள்ள தேவாலா பகுதியில் இரண்டு பெண்களைத் தாக்கிக் கொன்றும், குடியிருப்புகளைச் சேதப்படுத்தியும் வந்த மக்னா யானையை வனத் துறையினா் மயக்க ஊசி செலுத்தி, கும்கி யானைகளின் உதவியுடன் வியாழக்கிழமை பிடித்தனா்.
இதையடுத்து, வனப் பகுதியில் இரண்டு கிலோ மீட்டா் தொலைவுக்கு சாலை அமைத்து லாரி கொண்டு செல்லப்பட்டு, கும்கி யானைகள் உதவியுடன் மக்னா யானை லாரியில் ஏற்றப்பட்டது. தொடா்ந்து, முதுமலை புலிகள் காப்பகத்துக்கு கொண்டுச் செல்லப்பட்ட மக்னா யானையை மருத்துவா்கள் பரிசோதித்தனா்.
இதையடுத்து, முதுமலை புலிகள் காப்பகம் சீகூா் வனச் சரகத்திலுள்ள காங்கிரஸ்மட்டம் வனப் பகுதியில் வெள்ளிக்கிழமை அதிகாலை 2 மணியளவில் மக்னா யானை விடுவிக்கப்பட்டது.