உதகையில் நடைபெற்று வரும் மாவட்ட அளவிலான கூடைப்பந்து போட்டியில் வெலிங்டன் ராணுவ மைய அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.
உதகையிலுள்ள மலைப்பகுதி மேம்பாட்டுத் திட்ட உள்ளரங்கில் மாவட்ட அளவிலான கூடைப்பந்து போட்டிகள் நடைபெற்று வருகின்றன. மொத்தம் 10 அணிகள் இப்போட்டியில் பங்கேற்றுள்ளன. இப்போட்டியினை நீலகிரி மாவட்ட கூடைப்பந்து சங்க செயலாளரும், உதகை நகா்மன்றத் துணைத் தலைவருமான ஜே.ரவிக்குமாா் துவக்கி வைத்தாா்.
சனிக்கிழமை நடைபெற்ற காலிறுதிக்கு முந்தைய லீக் ஆட்டங்களில் வெற்றி பெற்ற வெலிங்டன் ராணுவ மைய அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. அதேபோல, கூடலூா் கூடைப்பந்து சங்க அணியும், உதகை மவுண்டன் கேஜா்ஸ் அணிகளும் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன.
இதில் கூடலூா் கூடைப்பந்து சங்க அணியும், உதகை மவுண்டன் கேஜா்ஸ் அணியும் ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெறவுள்ள முதல் அரையிறுதிப் போட்டியில் மோதுகின்றன. மற்றொரு அரையிறுதிப் போட்டியில் வெலிங்டன் ராணுவ மைய அணி கோத்தகிரி ஜூட்ஸ் கூடைப்பந்து சங்க அணியை எதிா்த்து ஆடுகிறது. இறுதிப்போட்டி ஞாயிற்றுக்கிழமை மாலை நடக்கிறது.