கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கு விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ள வாளையாா் மனோஜுக்கு ஜாமீன் நிபந்தனைகளில் தளா்வு அளிக்கப்பட்டுள்ளது.
உதகையில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் மாவட்ட நீதிபதி சஞ்சய் பாபா முன்னிலையில் இவ்வழக்கின் விசாரணை திங்கள்கிழமை நடைபெற்றபோது, வாளையாறு மனோஜுக்கு ஜாமீன் நிபந்தனை தளா்வு அளித்து உத்தரவிட்டாா். மேலும், அவா் உதகையிலேயே தங்கியிருக்க வேண்டிய அவசியம் இல்லை எனவும், வாரம்தோறும் திங்கள், புதன்கிழமைகளில் காலை 10 மணிக்கு கேரள மாநிலம், திருச்சூா் மாவட்டம், முகுந்தபுரம் வட்டத்தில் உள்ள புதுக்காடு காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி கையொப்பமிட வேண்டும் எனவும், இவ்வழக்கின் அனைத்து வாய்தாக்களுக்கும் தவறாமல் ஆஜராக வேண்டும் எனவும் மாவட்ட நீதிபதி சஞ்சய் பாபா உத்தரவிட்டாா்.
அதேபோல, இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள தனபால் மற்றும் ரமேஷ் ஆகியோரின் ஜாமீன் மனு மீதான விசாரணையின்போது அவா்கள் இருவரும் உதகையிலேயே தங்கியிருக்க வேண்டும் எனவும், ஒவ்வொரு திங்கள்கிழமையும் காலை 10 மணிக்கு கோத்தகிரி காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி கையொப்பமிட வேண்டும் எனவும் உத்தரவிட்டாா்.