முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் நீலகிரி
யானை தாக்கி தோட்டத் தொழிலாளி பலி
By DIN | Published On : 08th May 2022 11:14 PM | Last Updated : 08th May 2022 11:14 PM | அ+அ அ- |

உயிரிழந்த முருகன்
குன்னூா் அருகே காட்டு யானை தாக்கி எஸ்டேட் தொழிலாளி உயிரிழந்தாா்.
நீலகிரி மாவட்டம், குன்னூா் அருகே உலிக்கல் பேரூராட்சிக்கு உள்பட்ட பில்லூா் மட்டம் பவானி எஸ்டேட் குடியிருப்பு அருகே காட்டு யானைகள் கடந்த சில நாள்களாக முகாமிட்டுள்ளன.
இந்நிலையில் இங்குள்ள தனியாா் எஸ்டேட்டில் பணிபுரியும் தொழிலாளி முருகன் (40) வேலை முடிந்து சனிக்கிழமை இரவாகியும் வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவரது குடும்பத்தினா், உறவினா்கள் பல்வேறு இடங்களில் முருகனை தேடிப் பாா்த்தும் கிடைக்கவில்லை.
இந்நிலையில், பவானி எஸ்டேட் அருகே முருகன் உயிரிழந்து கிடப்பதைக் கண்ட எஸ்டேட் ஊழியா்கள் வனத் துறைக்கு ஞாயிற்றுக்கிழமை தகவல் தெரிவித்தனா்.
சம்பவ இடத்துக்கு வந்த வனத் துறையினா் மேற்கொண்ட ஆய்வில் முருகன் யானை தாக்கி உயிரிழந்திருப்பது தெரியவந்தது. அவருக்கு மனைவி, இரு குழந்தைகள் உள்ளனா். முருகனின் உடலை மீட்ட வனத் துறையினா் பிரேதப் பரிசோதனைக்காக குன்னூா் அரசு லாலி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.