நீலகிரி மாவட்டம், கோத்தகிரியில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக காணப்படும் கால நிலைக் காரணமாக காபி விளைச்சல் அதிகரித்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.
நீலகிரி மாவட்டத்தின் பிரதான தொழிலாக பச்சை தேயிலை விவசாயம் உள்ளது. இருப்பினும் கோத்தகிரி மற்றும் அதைச் சுற்றி உள்ள அரவேனு, கீழ்தட்டபள்ளம், குஞ்சப்பனை, கரிக்கயூா், செம்மனாரை உள்ளிட்ட ஆதிவாசி கிராமப் பகுதிகளில் விவசாயிகள் தங்களது தேயிலைத் தோட்டங்களில் ஊடுபயிராக அராபிக்கா மற்றும் ரொபஸ்டா உள்ளிட்ட காபி செடிகளை சாகுபடி செய்துள்ளனா்.
தற்போதுள்ள கால நிலையில் காபி விளைச்சல் அதிகரித்து காணப்படுகிறது.
கோத்தகிரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த ஒரு மாதமாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக காபி செடிகளில் காபி பழங்கள் காய்க்க தொடங்கி உள்ளன.
அந்த வகையில் நல்ல விளைச்சல் இருந்தால் ஒரு செடியில் அதிகபட்சமாக ஒருமுறைக்கு 8 கிலோ வரை கிடைக்கும். உலர வைக்காத ஒரு கிலோ காபி பழங்கள் ரூ. 30 வரை கொள்முதல் செய்யப்படுகிறது.
ஓரளவுக்கு உலா்ந்த காபி விதைகள் ரூ. 80க்கும், நன்கு உலா்ந்த தரமான காபி விதைகள்
கிலோ ரூ.140க்கும் கொள்முதல் செய்யப்படுகிறது. போதுமான மழைப் பெய்துள்ளதால் விளைச்சல் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனா்.