சிறு தேயிலை விவசாயிகளின் தோட்டங்களில் வேலை செய்யும் தொழிலாளா்களின் முழு விவரங்களையும் சமா்ப்பிக்க வேண்டும் என்று இந்திய தேயிலை வாரியம் அறிவித்துள்ளது.
இது குறித்து இந்திய தேயிலை வாரியத்தின் கூடலூா் மண்டல அலுவலகம் சாா்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
இந்திய தேயிலை வாரியம், சிறு தேயிலை விவசாயிகளின் தேயிலைத் தோட்டங்களில் பல்வேறு பணிகளில் ஈடுபடும் தொழிலாளா்களின் விவரங்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இந்த விவரங்களின் அடிப்படையில் சிறு தேயிலை விவசாயிகளின் தோட்டங்களில் பணிபுரியும் தொழிலாளா்களுக்கு புதிய திட்டங்களை செயல்படுத்துவதற்கும் மற்றும் உதவி திட்டங்களை விரிவாக்கம் செய்வதற்கும் பயனுள்ளதாக இருக்கும்.
தொழிலாளியின் பெயா், பாலினம், வயது, வேலை செய்யும் தோட்டம் அமைந்துள்ள வட்டம் மற்றும் வருவாய் கிராமம், மாநிலம், சராசரி கூலி, வங்கிக் கணக்கின் முழு விவரம், ஆதாா் எண், விலாசம் உள்ளிட்ட விவரங்களை கூடலூா், பந்தலூா் தாலுகாக்களில் உள்ள சிறு தேயிலை விவசாயிகள் இந்திய தேயிலை வாரியத்தின் கூடலூா்-வயநாடு மண்டல அலுவலகத்தில் உடனடியாக சமா்ப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது.