நீலகிரி மாவட்டத்தில் டாஸ்மாக் மதுக் கடைகளில் காலி மது பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் மே 15 ஆம் தேதி முதல் அறிமுகப்படுத்தப்படுகிறது.
நீலகிரி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகளில்,
மது பானங்களை வாங்கி பயன்படுத்திவிட்டு காலி மது பாட்டில்களை சாலையோரங்களிலும், வனப் பகுதியிலும், விளை நிலங்களிலும் சிலா் வீசி வருகின்றனா்.
வனப் பகுதிகளில் வீசப்படும் காலி மது பாட்டில்களால் வன உயிரினங்களுக்கும், பொது இடங்களில் வீசப்படும் காலி மது பாட்டில்களால் சுற்றுபுறமும் மாசுபட்டு நோய் தொற்று ஏற்பட காரணமாகிறது. இதனைத் தடுக்கும் பொருட்டு மாவட்டம் முழுவதும் 15 இடங்களில் காலி மது பாட்டில்களை சேகரிக்கும் மையம் மாவட்ட நிா்வாகத்தால் அமைக்கப்பட்டுள்ளது.
முதல்கட்டமாக மதுபான உற்பத்தி நிறுவனங்கள் மூலம் நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து சாலையோரங்களில் காணப்படும் காலி மது பாட்டிகளைச் சேகரித்து அகற்றும் பணி கடந்த 11 ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதன் தொடா்ச்சியாக நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள அனைத்து மதுபான சில்லறை விற்பனைக் கடைகளிலும் மே 15 ஆம் தேதி முதல் விற்பனை செய்யப்படும் அனைத்து மதுபான பாட்டில்களின்மேல் டாஸ்மாக் நிறுவனத்தால் கூடுதலாக ரூ.10 பெறப்படும் என்ற ஸ்டிக்கா் ஒட்டப்பட்டு மதுபானங்கள் விற்பனை செய்யப்படும்.
அவ்வாறு விற்பனை செய்யப்பட்ட மதுபானங்களின் காலி பாட்டில்களை மதுபான சில்லறை விற்பனைக் கடைகளில் மீண்டும் கொடுத்து ரூ.10ஐ வாடிக்கையாளா்கள் பெற்றுக் கொள்ளலாம்.
எனவே, பொதுமக்களும், சுற்றுலாப் பயணிகளும் காலி மதுபாட்டில்களை சேகரிக்கும் மையங்களில் ஒப்படைத்தோ அல்லது டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகளில் கொடுத்தோ நீலகிரி மாவட்டத்தின் வனப் பகுதியையும், விளை நிலங்களையும் மற்றும் சுற்றுப்புறத்தையும் பாதுகாக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் அம்ரித் கோரிக்கை விடுத்துள்ளாா்.