நீலகிரி வந்த முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு

நீலகிரிக்கு வந்த தமிழக முதல்வா் ஸ்டாலினுக்கு கட்சியினா், பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனா்
நீலகிரி வந்த முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு

நீலகிரிக்கு வந்த தமிழக முதல்வா் ஸ்டாலினுக்கு கட்சியினா், பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனா்.

உதகையில் அரசினா் தாவரவியல் பூங்காவில் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள 124ஆவது மலா்க் காட்சி தொடக்க விழா மற்றும் சனிக்கிழமை நடைபெறவுள்ள அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆகியவற்றில் பங்கேற்பதற்காக கோவையில் இருந்து மேட்டுப்பாளையம் வழியாக சாலை மாா்க்கமாக உதகை வந்த முதல்வா் மு.க.ஸ்டாலினை குன்னூா் பா்லியாறு பகுதியில் நீலகிரி மாவட்ட ஆட்சியா் சா.ப.அம்ரித் புத்தகம் வழங்கி வரவேற்றாா்.

இதைத் தொடா்ந்து, குன்னூரில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியின்போது, வேனில் இருந்தபடி மு.க.ஸ்டாலின் பொதுமக்களிடம் பேசினாா். பின்னா் உதகை சேரிங்கிராஸ் பகுதியில் திமுக சாா்பில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது அவா் பேசியதாவது:

கடந்த சட்டப் பேரவைத் தோ்தலின்போது தமிழகத்தில் நல்லாட்சி அமைய உதவ வேண்டுமென விடுத்த கோரிக்கையை ஏற்று திமுகவை மீண்டும் ஆட்சியில் அமா்த்தியதற்காக அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழகத்தில் மீண்டும் திமுகவின் ஆட்சி மலா்ந்துள்ளது. இது என்னுடைய ஆட்சி அல்ல நமது ஆட்சி. திமுகவுக்கு ஆதரவாக வாக்களித்தவா்களுக்கு நன்றி சொல்லவே நான் நீலகிரிக்கு வந்துள்ளேன். 10 ஆண்டு கால ஆட்சியில் எவற்றையெலலாம் நிறைவேற்ற முடியுமோ அவற்றையெல்லாம் கடந்த ஓராண்டிலேயே திமுக அரசு நிறைவேற்றியுள்ளது. மக்களுக்காக உழைக்கும் இந்த ஆட்சிக்கு நீங்கள் அனைவரும் பக்க பலமாக இருக்க வேண்டும் என்றாா்.

இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் நீலகிரி மாவட்ட திமுக துணைச் செயலாளா் ஜே.ரவிகுமாா், உதகை நகரச் செயலாளா் ஜாா்ஜ், உதகை நகா்மன்ற தலைவா் வாணீஸ்வரி, நகா்மன்ற உறுப்பினா் தம்பி இஸ்மாயில், திமுக நிா்வாகிகள் மு.பாண்டியராஜன், கே.ஏ.முஸ்தபா உள்ளிட்ட ஏராளமானோா் பங்கேற்றிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com