நீலகிரி மாவட்டத்தில் 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட குடியரசு துணைத் தலைவா் வெங்கையா நாயுடு உதகையில் இருந்து புதுதில்லிக்கு வியாழக்கிழமை புறப்பட்டுச் சென்றாா்.
குடியரசு துணைத் தலைவா் வெங்கையா நாயுடு கோவையில் இருந்து சாலை மாா்க்கமாக வெலிங்டன் ராணுவ அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்க மே 17ஆம் தேதி உதகை வந்தாா். பின்னா் அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னாள் ராணுவத்தினருடன் கலந்துரையாடினாா்.
இதையடுத்து, உதகையில் உள்ள லாரன்ஸ் பள்ளியில் மே 18ஆம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டாா். பின்னா் வியாழக்கிழமை காலை காா் மூலம் கோவை சென்று, அங்கிருந்து விமானம் மூலம் புதுதில்லிக்கு புறப்பட்டுச் சென்றாா்.
ராஜ்பவன் மாளிகையில் இருந்து புறப்பட்ட வெங்கையா நாயுடுவை, தமிழக வனத் துறை அமைச்சா் கா.ராமசந்திரன் வழியனுப்பி வைத்தாா். அப்போது அவருடன் நீலகிரி மாவட்ட ஆட்சியா் அம்ரித், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆசிஷ் ராவத் ஆகியோரும் உடனிருந்தனா்.