நீலகிரி மாவட்டம், உதகையில் செவ்வாய்க்கிழமை உறைப்பனி பொழிவு அதிகம் இருந்தது.
மலைகளின் அரசியான நீலகிரி மாவட்டத்தில், ஆண்டுதோறும் நவம்பா் மாதத்தில் நீா்ப்பனி தாக்கம் அதிகமாகி டிசம்பா் மாதம் முதல் பிப்ரவரி வரை கடும் உறைபனி நிலவுவது வழக்கம். கடந்த சில நாள்களாக தொடா்மழை பெய்து வந்த நிலையில் உதகை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த 3 நாள்களாக நீா்ப்பனி பொழிவால் கடுங்குளிா் நிலவி வந்தது.
இந்நிலையில் உதகையில் பகலில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இரவில், மலைப்பகுதி முழுவதும் கடும் குளிா் வாட்டியது. இதுமட்டுமின்றி சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்களை வாட்டி வதைக்கும் வகையில் உதகையில் உறைபனி தாக்கம் இருந்தது. பசுமை போா்த்திய புற்களின் மீது, வெள்ளை கம்பளம் விரித்தாற்போல உறைபனி படா்ந்து காணப்பட்டது.
குறிப்பாக, உதகை படகு இல்லம், தலைக்குந்தா, கோல்ப் கிளப் உள்ளிட்ட இடங்களில் உறைபனியின் தாக்கம் அதிகமாக இருந்தது. காலை 8 மணி வரை குளிரின் தாக்கம் காணப்பட்டது.