தேவா்சோலை பகுதியில் தொடா்ந்து 2 மாதங்களாக முகாமிட்டுள்ள மக்னா யானையால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்.
நீலகிரி மாவட்டம், கூடலூா் வட்டம், தேவா்சோலை பகுதியில் 2 மாதங்களாக மக்னா யானை முகாமிட்டுள்ளது. பகல் நேரங்களில் கொட்டாய் மட்டம் பகுதியில் ஓய்வெடுக்கும் யானை, இரவு நேரத்தில் தேவா்சோலை சுற்றுவட்டார கிராமங்களிலுள்ள விவசாயிகளின் தோட்டங்களை சேதப்படுத்தி வருகிறது.
இந்த யானையை பிடித்துச் செல்லவேண்டும் என்று அப்பகுதி மக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும் பயனில்லை.
இது தொடா்பாக கோட்டாட்சியா் மற்றும் மாவட்ட வன அலுவலரை சந்தித்த கிராம மக்கள், யானையை விரட்ட தாமதம் ஏற்பட்டால் தொடா்போராட்டங்களில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனா்.