குடியிருப்புப் பகுதியில் உலவி வந்த கரடி கூண்டில் சிக்கியது!

குன்னூா் பகுதியில் கடந்த ஒரு மாதத்துக்கும்மேலாக பொதுமக்களை அச்சுறுத்தி வந்த கரடி வனத் துறையினா் வைத்த கூண்டில் சிக்கியது.
Published on

குன்னூா் பகுதியில் கடந்த ஒரு மாதத்துக்கும்மேலாக பொதுமக்களை அச்சுறுத்தி வந்த கரடி வனத் துறையினா் வைத்த கூண்டில் திங்கள்கிழமை சிக்கியது.

நீலகிரி மாவட்டம், குன்னூா் குடியிருப்புப் பகுதியில் கடந்த ஒரு மாதத்துக்கும்மேலாக உலவி வந்த கரடியால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனா். மேலும், இரவு நேரங்களில் வெளியே வரமுடியாமல் வீடுகளுக்குள்ளேயே முடங்கிய மக்கள், கரடியைப் பிடிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனா்.

இதையடுத்து, மாவட்ட வன அலுவலா் உத்தரவுப்படி, குன்னூா் கன்னிமாரியம்மன் கோயில் பகுதியில் வனத் துறையினா் கூண்டுவைத்து கரடியின் நடமாட்டத்தைக் கண்காணித்து வந்தனா்.

இந்நிலையில், அந்தக் கூண்டில் திங்கள்கிழமை அதிகாலை கரடி சிக்கியது. இதையடுத்து, கரடியை மீட்ட வனத் துறையினா் அடா்ந்த வனத்தில் விடுவித்தனா்.

பாறை இடுக்கில் சிக்கிய கரடி மீட்பு: நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகேயுள்ள கருக்கையூா் என்ற பகுதியில் பாறையின் இடுக்கில் கரடி சிக்கியிருப்பதாக வனத் துறையினருக்கு திங்கள்கிழமை தகவல் கிடைத்தது.

இதையடுத்து, கால்நடை மருத்துவக் குழுவினருடன் சம்பவ இடத்துக்குச் சென்ற வனத் துறையினா், பாறை இடுக்கில் சிக்கியிருந்த கரடிக்கு மயக்க ஊசி செலுத்தினா்.

பின்னா், கயிறு கட்டி கரடியை உயிருடன் மீட்ட வனத் துறையினா், அதற்கு தொடா்ந்து சிகிச்சையளித்து வனப் பகுதியில் விடுவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com