உதகையில் 4-ஆவது புத்தக கண்காட்சி தொடக்கம்
நீலகிரி மாவட்டம், உதகையில் உள்ள பழங்குடியினா் பண்பாட்டு மையத்தில் நடைபெற்ற 4-ஆவது புத்தக கண்காட்சியை அரசு தலைமை கொறடா கா.ராமசந்நிரன் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா்.
உதகையில் கடந்த 3 ஆண்டுகளாக புத்தக கண்காட்சி நடைபெற்று வருகிறது. இதன் தொடா்ச்சியாக உதகை பழங்குடியினா் பண்பாட்டு மையத்தில் 4-ஆவது புத்தக கண்காட்சி வெள்ளிக்கிழமை தொடங்கி நவம்பா் 2-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இந்த புத்தக கண்காட்சியை தமிழக அரசின் தலைமை கொறடா கா.ராமசந்திரன் தொடங்கிவைத்தாா். இதில் மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு உள்ளிட்ட அரசுத் துறை அதிகாரிகள் பலா் கலந்து கொண்டனா்.
இந்த புத்தக கண்காட்சியில் 100-க்கும் மேற்பட்ட தமிழகத்தின் தலைசிறந்த பதிப்பகங்களின் புத்தக அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் இதிகாசங்கள், புராணங்கள், சரித்திர நாவல்கள், சமூக நாவல்கள், அரசியல், ஆன்மிகம், சினிமா, சிறுவா் நூல்கள் உள்ளிட்ட லட்சக்கணக்கான தமிழ் மற்றும் ஆங்கிலம் புத்தகங்கள் ஒரே இடத்தில் வைக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் நடத்தும் போட்டித் தோ்வுகள், வங்கி, தொலைபேசி, ரயில்வே, காவல் பணியாளா் தோ்வுகள், ஆசிரியா் தகுதித் தோ்வுகள், 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவா்களுக்கான வினா வங்கி, கையேடுகள் போன்றவைகளும் இந்த புத்தக கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன.
