பல்லடத்தில் நகராட்சிப் பகுதிகளில் சேகரமாகும் குப்பையை இரங்காடு பகுதியில் கொட்ட பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
பல்லடம் நகராட்சியில் மொத்தமுள்ள 18 வார்டு பகுதிகளில் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இப்பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பையை மக்கள் நடமாட்டம் இல்லாத சாலையோரம் மற்றும் பயன்பாடில்லாத கிணற்றில் துப்புரவுத் தொழிலாளர்கள் கொட்டி வருகின்றனர்.
இந்நிலையில், பல்லடம் - தாராபுரம் சாலையில் இரங்காடு பகுதியில் பட்டாதாரர்களின் பயன்பாடு இல்லாத கிணற்றில் குப்பை கொட்டப்பட்டு வந்தது. இதற்கு, ராஜீவ் காந்தி நகர் பகுதி மக்கள் புதன்கிழமை கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். குப்பை கொட்ட வந்த நகராட்சி லாரிகளை அவர்கள் முற்றுகையிட்டு குப்பையை கொட்ட விடாமல் திருப்பி அனுப்பினர்.
பல்லடம் வட்டாட்சியர் அலுவலகம் அமைக்க, நகராட்சியின் குப்பை கொட்டும் இடத்தை அன்றைய பேருராட்சி நிர்வாகம் அளித்தது. மேலும், குப்பையைக் கொட்டுவதற்காக கடந்த திமுக ஆட்சியின்போது கேத்தனூரில் இடம் வாங்கப்பட்டது. ஆனால், உரிய வழித்தடம் இல்லாததால் அங்கு குப்பை கொட்ட முடியாத நிலை நீடித்து வருகிறது. இந்நிலையில், நகராட்சி பகுதிகளில் தற்போது சேகரமாகும் குப்பையை கொட்ட இடம் கிடைக்காமல் பல்லடம் நகராட்சி நிர்வாகம் திணறி வருகிறது. குப்பை கொட்ட பல்லடம் நகராட்சி நிர்வாகத்துக்கு, திருப்பூர் மாவட்ட நிர்வாகம் உடனடியாக மாற்று இடம் தேர்வு செய்து வழங்காவிடில் நகரில் மலைபோல் குப்பை தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.