உடுமலை நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த சுமார் ரூ. 150 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருவதாக அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
உடுமலை நகரில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவற்கான ஆலோசனைக் கூட்டம் நகராட்சி அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. இதில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் பேசியதாவது: உடுமலை நகராட்சியில் 3-ஆவது குடிநீர்த் திட்டத்துக்கு ரூ. 31 கோடி ஒதுக்கப்பட்டு பணிகள் நிறைவு பெறும் நிலையில் உள்ளன. குடிசை மாற்று வாரியத்தின் மூலம் ஏழை, எளியவர்களுக்கு ரூ. 20 கோடியில் 917 வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன.
நகரில் போக்குவரத்து வசதிகளுக்காக 7 திட்ட சாலைகளை மேம்படுத்த ரூ. 10 கோடியில் பணிகள் நடைபெற்று வருகின்றன. நகராட்சி ஊழியர்களுக்காக ரூ. 20 கோடி செலவில் அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. உடுமலை நகரில் 209 தேசிய நெடுஞ்சாலையில் ரூ. 8 கோடி செலவில் சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவுக்கு நான்கு வழிச்சாலை முடியும் தருவாயில் உள்ளது.
அனைத்து வார்டுகளிலும் சாக்கடை, குடிநீர், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்த ரூ. 20 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அம்மா திருமண மண்டபத்துக்கு ரூ. 8 கோடியும், நகராட்சி அலுவலக புதிய கட்டடத்துக்கு ரூ. 3 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளன என்றார்.
இந்தக் கூட்டத்தில், பொள்ளாச்சி மக்களவை உறுப்பினர் சி.மகேந்திரன், நகராட்சி ஆணையர் க.சரவணக்குமார், தலைமைப் பொறியாளர் தங்கராஜ், நகர் நல அலுவலர் டாக்டர் அருண், நகரமைப்பு அலுவலர் பாஸ்கரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.