அரிசி விலை குறைய வாய்ப்பு இல்லை என காங்கயம் தாலுகா அரிசி ஆலை உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சங்கத்தின் தலைவர் பழனிசாமி விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது :
கடந்த ஆண்டு மழை பொய்த்து விட்டபடியாலும், நடப்பு ஆண்டு தேவைக்கேற்ற மழை இதுவரை பெய்யாததாலும் தென் மாநிலங்களான கர்நாடகம், தமிழகம் இரண்டிலும் நெல் விளைச்சல் 60 சதவீதம் அளவே விளையும் சூழ்நிலை உள்ளது. ஒரு சில மாவட்டங்களில் கடந்த ஆண்டு நெல் விளைச்சல் முற்றிலுமாக இல்லை. இதன் காரணமாக 2017 ஜனவரி முதல் நெல் விலை ஏறுமுகமாக இருந்துள்ளது. கர்நாடகத்தில் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல் கிலோவுக்கு ரூ.1 கூடுதலாக வாங்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் விலையேற்றம் என்பது தவிர்க்க முடியாததாகிவிட்டது.
ஆனால் ஒருசிலர் நெல் விலை குறைந்துவிட்டது, அரிசி விலை வெகுவாக குறையும் என உள்நோக்கத்துடன் மக்களையும், அரிசிமண்டி உரிமையாளரையும் குழப்பி வருகின்றனர்.
வரும் நாள்களில் நெல் அதிக அளவில் விளையும் என்பதற்கு எந்த முகாந்திரமும் இல்லாமல் மழையை எதிர்நோக்கி இருக்கும் சூழல் உள்ளது. தற்போது உள்ள சூழ்நிலையில் அரிசி விலை குறையாது என்பதுதான் உண்மை. மேலும் பிராண்டு அரிசிக்கு ஜி.எஸ்.டி வரி அமல்படுத்தியதால் வழக்கமான விலையேற்றத்துடன், ஜி.எஸ்.டி யும் சேர்ந்து விலை உயர காரணமாகிவிட்டது. ஜி.எஸ்.டி. வரி நீக்கப்பட்டால், அரிசி விலை சற்று குறைய வாய்ப்புள்ளது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.