படைப்புழுத் தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்காச்சோள விவசாயிகளுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்கக் கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் பெதப்பம்பட்டியில் ஆர்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
உடுமலையை அடுத்துள்ள பெதப்பம்பட்டி நான்கு சாலை சந்திப்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, குடிமங்கலம் ஒன்றியத் தலைவர் ஆர்.லட்சுமணசாமி தலைமை வகித்தார். நிர்வாகிகள் ஜி.வெங்கடேஷ், எம்.ராஜகோபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மக்காச்சோளப் பயிரில் படைப்புழுத் தாக்குதலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 25,000 நஷ்ட ஈடு வழங்க வேண்டும், தென்னையில் வெள்ளை ஈ தாக்குதலைக் கட்டுப்படுத்த வேளாண் துறை இலவசமாக ஒட்டுண்ணி மற்றும் உரம் வழங்க வேண்டும். பி.ஏ.பி. யில் 5 ஆம் சுற்று தண்ணீரை உடனே திறந்து விட்டு நிலத்தடிநீர் ஆதாரத்தை பாதுகாக்கவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் இந்த ஆர்ப்பாட்டத்தில்
வலியுறுத்தப்பட்டன.
மாவட்ட நிர்வாகிகள் அ.பாலதண்டபாணி, ஏ.ராஜகோபால், ஆ.தங்கவடிவேல், சி.ஜே.ஸ்ரீதர், எம்.சுந்தர்ராஜ் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டக் குழு உறுப்பினர் வெ.ரங்கநாதன் வாழ்த்துரை வழங்கினார்.
ஆர்ப்பாட்ட முடிவில் குடிமங்கலம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் மகாலிங்கத்திடம் மனு அளிக்கப்பட்டது.