பிஏபி திட்டத்தின் கீழ் முதலாம் மண்டலப் பாசனப் பகுதிகளுக்கு உடுமலையை அடுத்துள்ள திருமூர்த்தி அணையில் இருந்து புதன்கிழமை தண்ணீ ர் திறந்து விடப்பட்டது.
பிஏபி பாசனத் திட்டத்தில் மொத்தம் உள்ள சுமார் 4 லட்சம் ஏக்கர் நான்கு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு ஆண்டுக்கு 2 மண்டலங்கள் வீதம் தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மண்டலத்திலும் உள்ள சுமார் 1 லட்சம் ஏக்கருக்கு முறை வைத்து தண்ணீர் விடப்பட்டு வருகிறது. முதலாம் மண்டலத்துக்கு தண்ணீர் திறந்து விடுவதில் விவசாயிகள், அதிகாரிகளுக்கு இடையே கருத்து வேறுபாடுகள் நிலவி வந்தது. இந்நிலையில், விவசாயிகள் பொள்ளாச்சி பிஏபி அலுவலகத்தை கடந்த வாரம் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். பேச்சுவார்த்தையில், முதலாம் மண்டலத்துக்கு 2 சுற்று தண்ணீர் திறந்து விடுவது என முடிவு செய்யப்பட் டது.
இந்நிலையில், முதல் மண்டலப் பாசனப் பகுதிகளுக்கு திருமூர்த்தி அணையில் இருந்து ஜனவரி 31-ஆம் தேதி தண்ணீர் திறந்து விட முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டிருந்தார்.
இதன்படி கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் அணையிலிருந்து புதன்கிழமை தண்ணீரை திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி, பொள்ளாச்சி மக்களவை உறுப்பினர் சி.மகேந்திரன், மாவட்ட வருவாய் அலுவலர் ச.பிரசன்ன ராமசாமி, சட்டப் பேரவை உறுப்பினர்கள் இரா.ஜெயராமகிருஷ்ணன்(மடத்துக்குளம்), கனகராஜ் (சூலூர்), கே.என்.விஜயகுமார்(திருப்பூர் வடக்கு), வி.எஸ்.காளிமுத்து (தாராபுரம்) மற்றும் பொதுப்பணித் துறை, வருவாய்த் துறை அதிகாரிகள், விவசாயிகள், அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இந்த தண்ணீர் திறப்பின் மூலம் கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டத்தில் 12,567 ஏக்கரும், சூலூர் வட்டத் தில் 4,033 ஏக்கரும், திருப்பூர் மாவட்டம், உடுமலை வட்டத்தில் 27,446 ஏக்கரும், மடத்துக்குளம் வட்டத்தில் 7,492 ஏக்கரும், தாராபுரம் வட்டத்தில் 8,395 ஏக்கரும், பல்லடம் வட் டத்தில் 7,887 ஏக்கரும், திருப்பூர் வட்டத்தில் 11,309 ஏக்கரும், காங்கயம் வட்டத்தில் 15,392 ஏக்கரும் என மொத்தம் 94 ஆயிரத்து 521 ஏக்கர் பயன்பெறுகிறது.
இது குறித்து பொதுப் பணித் துறை அதிகாரிகள் கூறுகையில், "மொத்தம் இரண்டு சுற்றுக்களாக தண்ணீர் திறந்து விட ஏற்பாடு செய்யப்பட்டு ள்ளது. இந்த மண்டலத்துக்கு மொத்தம் 3800 மில்லியன் கன அடி தண்ணீர் திறக்கப்பட உள்ளது' என்றனர்.