வரத்து இல்லாததால் வெள்ளக்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் சூரியகாந்தி விதை ஏலம் ரத்து செய்யப்பட்டது.
இங்கு, வாரந்தோறும் வியாழக்கிழமை சூரியகாந்தி விதை ஏலம் மூலமாக விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளக்கோவில் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த பகுதிகள் மற்றும் அருகில் உள்ள முத்தூர், மூலனூர் பகுதிகளில் அதிக அளவு சூரியகாந்தி சாகுபடி செய்யப்பட்டது.
அப்போது வரத்து அதிக அளவில் இருந்த நிலையில், இப்பகுதியில் எண்ணெய் ஆலைகளும் இருப்பதால் வெள்ளக்கோவில் விற்பனைக் கூடம் சூரியகாந்தி விதை விற்பனைக்குப் பெயர் பெற்று விளங்கியது.
தற்போது, உள்ளூர் பகுதி விவசாயிகள் மாற்றுப் பயிருக்கு மாறிவிட்டதாலும், வறட்சி காரணமாகவும் உள்ளூரில் வரத்து குறைந்துவிட்டது.
இருப்பினும் திருச்சி, கரூர், திண்டுக்கல் மாவட்டங்களில் இருந்து சூரியகாந்தி வரத்து இருந்ததால் விற்பனை தொடர்ந்து நடைபெற்று வந்தது. ஆனால், வரத்து முற்றிலும் வரத்து இல்லாமல் போனதால் ஏலம் ரத்து செய்யப்பட்டது.
சூரியகாந்தி விதை வரத்து தொடங்கியதும் மீண்டும் வழக்கம்போல விற்பனை நடைபெறும் என விற்பனைக்கூட வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.