திருப்பூர் தெற்கு சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட தம்பதி விபத்தில் உயிரிழந்ததைத் தொடர்ந்து அவரது குடும்பத்தினருக்கு விபத்து நிவாரண நிதி வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.
திருப்பூர் மாநகராட்சி, 56ஆவது வார்டு, செல்லம் நகரைச் சேர்ந்தவர் செளந்தரபாண்டியன். இவர், தனது மனைவி, இரு குழந்தைகளுடன் திண்டுக்கல் அருகே உள்ள அம்மைநாயக்கனூர் (கொடை ரோடு) எனும் இடத்தில் 2017 ஆகஸ்ட் 8ஆம் தேதி நேரிட்ட விபத்தில் சௌந்தரபாண்டியனும், அவரது மனைவியும் உயிரிழந்தனர்.
இதையடுத்து, திருப்பூர் தெற்குத் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் சு.குணசேகரன் பரிந்துரையின் பேரில் தமிழக அரசின் சாலை விபத்து நிவாரண நிதித் தொகை ரூ. 2 லட்சத்துக்கான காசோலையை தெற்கு வட்டாட்சியர் ரவிச்சந்திரன், உயிரிழந்த சௌந்தரபாண்டியனின் குடும்பத்தினரிடம் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியின்போது மாநகராட்சி முன்னாள் உறுப்பினர்கள் அன்பகம் திருப்பதி, கண்ணப்பன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.