காங்கயம் அருகே வெறிநாய்கள் கடித்துக் குதறியதில் 6 செம்மறி ஆடுகள் உயிரிழந்துள்ளன.
காங்கயத்தை அடுத்துள்ள பாப்பினி அருகே உள்ளது அழகுகவுண்டன்வலசு. இப்பகுதியைச் சேர்ந்தவர் நாச்சிமுத்து (50). இவர், தான் வளர்த்துவரும் 15 செம்மறி ஆடுகளையும் வியாழக்கிழமை இரவு வழக்கம்போல பட்டியில் அடைத்து வைத்துவிட்டு சென்றுவிட்டார். மீண்டும், வெள்ளிக்கிழமை காலையில் வந்து பார்த்தபோது பட்டியில் இருந்த 6 ஆடுகளை அப்பகுதியில் சுற்றித் திரிந்த வெறி நாய்கள் கடித்துக் குதறியதும், இதில் ஆடுகள் இறந்து கிடப்பதும் தெரியவந்தது.
இதுகுறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த நத்தக்காடையூர் பகுதி கால்நடை மருத்துவர்கள் உயிரிழந்த ஆடுகளைப் பரிசோதனை செய்தனர். இறந்த ஆடுகளின் மதிப்பு ரூ. 65 ஆயிரம் இருக்கும் என கூறப்படுகிறது.
காங்கயம் பகுதியில் கடந்த 10 நாள்களில் 50க்கும் மேற்பட்ட ஆடுகள் வெறிநாய்கள் உள்ளிட்ட மர்ம விலங்குகளால் கடித்து உயிரிழக்கும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருவது
இப்பகுதியில் ஆடுகளை வளர்த்து வரும் விவசாயிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.