வெள்ளக்கோவில் அருகே மனைவியின் கழுத்தை அறுத்துக் கொல்ல முயன்ற கணவரைக் காவல் துறையினர் திங்கள்கிழமை கைது செய்தனர்.
வெள்ளக்கோவிலை அடுத்த கொடுவாய், செட்டிபாளையத்தைச் சேர்ந்தவர் சேகர் (27). தென்னை மரம் ஏறும் தொழிலாளி. புதுப்பை, பட்டத்திபாளையத்தைச் சேர்ந்தவர் ஜெயலட்சுமி (23). இருவருக்கும் திருமணமாகி 7 வருடம் ஆகிறது. 5 வயதில் பெண் குழந்தை உள்ளது. குடும்பத் தகராறு காரணமாக தனது சொந்த ஊரில், அவரது பெரியப்பா வீட்டில் தங்கி உள்ளார். இந்நிலையில், புதுப்பை பேருந்து நிலையத்தில் ஜெயலட்சுமி ஞாயிற்றுக்கிழமை நின்று கொண்டிருந்தபோது, அங்கு வந்த சேகர் கத்தியால் ஜெயலட்சுமியின் கழுத்தை அறுத்துவிட்டுத் தப்பிச் சென்றுவிட்டார்.
மயங்கி விழுந்த ஜெயலட்சுமி காங்கயம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின் பேரில் வெள்ளக்கோவில் காவல் ஆய்வாளர் மு.ஜெயபாலன் வழக்குப் பதிவு செய்து சேகரை கைது செய்து, காங்கயம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்.