திருப்பூரில் இருசக்கர வாகனத்தின் மீது வேன் மோதி விபத்துக்குள்ளானதில் 6ஆம் வகுப்பு மாணவி திங்கள்கிழமை இரவு உயிரிழந்தார்.
திருப்பூர், குமார் நகரைச் சேர்ந்தவர் கருப்பசாமி (35). மளிகை கடை வைத்துள்ளார். இவரது மனைவி நித்யா (30). இவர்களது மகன் ஜெகசஞ்சித் (12), மகள் கார்னிகா (10).
இதில், கார்னிகா அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 6ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், தந்தை கருப்பசாமியும், மகள் கார்னிகாவும் அவிநாசி சாலையில் இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்தனர்.
அவர்கள், குமார் நகர் அருகே வந்தபோது, பின்னால் வந்த வேன் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் கார்னிகா, கருப்பசாமி ஆகியோர் பலத்த காயமடைந்து திருப்பூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டனர். இதில், கார்னிகா உயிரிழந்தார்.
இதுகுறித்து திருப்பூர் வடக்கு காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து அவிநாசியை சேர்ந்த வேன் ஓட்டுநர் ஜானகிராமனை (34) கைது செய்தனர்.