மத்திய அரசின் ரஃபேல் போர் விமான ஊழலைக் கண்டித்து, காங்கிரஸ் கட்சி சார்பில் திருப்பூரில் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி அக்கட்சி சார்பில் திருப்பூர், தென்னம்பாளையத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் முகுல் வாஸ்னிக், தமிழ்நாடு தலைவர் சு.திருநாவுக்கரசர், செயலாளர் சஞ்சய் தத், முன்னாள் மாநிலத் தலைவர்கள், கே.வி.தங்கபாலு, இ.வி.கே.எஸ்.இளங்கோவன், அமைப்பு செயலாளர் தணிகாசலம், முன்னாள் எம்எல்ஏ ஆர்.எம்.பழனிசாமி, தாராபுரம் எம்எல்ஏ வி.எஸ்.காளிமுத்து, திருப்பூர் மாநகர் மாவட்டத் தலைவர் ஆர்.கிருஷ்ணன், ப.கோபி (வடக்கு), கே.தென்னரசு (தெற்கு) ஆகியோர் பங்கேற்றனர். இதைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியினர்
ஊர்வலமாக ஆட்சியர் அலுவலகத்தை அடைந்தனர்.
இதைத் தொடர்ந்து முகுல் வாஸ்னிக் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ரஃபேல் போர் விமானம் வாங்கியதில் மத்திய அரசு வெளிப்படைத் தன்மையாக செயல்படவில்லை. இதில் ரூ. 41 ஆயிரம் கோடி வரை ஊழல் நடைபெற்றுள்ளது. இந்த ஒப்பந்தத்தில் எந்த ஒரு அரசு நடைமுறையும் பின்பற்றப்படவில்லை. இதுகுறித்து நாடாளுமன்றத் துணைக் குழு முறையான விசாரணை நடத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளோம். நாட்டின் பிரதமராக இருக்க வேண்டிய மோடி இன்னும் பாஜகவின் தலைவராகவே உள்ளார் என்றார்.
இதைத் தொடர்ந்து ரஃபேல் போர் விமான ஊழலை குடியரசுத் தலைவர் விசாரனைக்கு உத்தரவிட மாவட்ட ஆட்சியர் பரிந்துரைக்க கோரி மனு அளித்தனர்.