திருப்பூர் உழவர் சந்தையில் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் கே.சுப்பராயனுக்கு ஆதரவாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை வாக்கு சேகரித்தார்.
மக்களவைத் தேர்தலை ஒட்டி தமிழகம் முழுவதிலும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரித்து வருகிறார். திருப்பூர் மக்களவைத் தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் கே.சுப்பராயனுக்கு ஆதரவாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை காலை 6 மணி அளவில் உழவர் சந்தையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
மேலும், அங்குள்ள விவசாயிகளிடம் குறைகளைக் கேட்டறிந்தார். ஸ்டாலின் உழவர் சந்தைக்கு வந்துள்ள தகவல் பரவியதும் பொதுமக்கள் கூட்டம் அதிகரித்தது. இதில் சிலர் அவருக்கு கை கொடுப்பதிலும், அவருடன் இணைந்து செல்பி எடுத்துக் கொள்வதிலும் ஆர்வமாக இருந்தனர்.
இந்த நிகழ்வின்போது, இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், திமுகவின் வடக்கு மாவட்டக் தலைவர் க.செல்வராஜ், மாநகர செயலாளர் டி.கே.டி.நாகராஜ், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எம்.ரவி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.