வெள்ளக்கோவிலை அடுத்த மூலனூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.1.20 கோடிக்கு பருத்தி விற்பனை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்த வார ஏலத்துக்கு திருச்சி, கரூர், திண்டுக்கல், மணப்பாறை, அரவக்குறிச்சி, தாராபுரம், உடுமலைப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 420 விவசாயிகள் தங்களுடைய பருத்திகளை விற்பனை செய்யக் கொண்டு வந்திருந்தனர்.
இதில் பழனி, திருப்பூர், பொள்ளாச்சி, உடுமலை, காரமடை, திண்டுக்கல், அன்னூர், தாராபுரம், சேவூர், கொங்கனாபுரம், மகுடஞ்சாவடி, சாமநாயக்கன்பாளையம் உள்ளிட்ட இடங்களில் இருந்து 15 வணிகர்கள் பருத்தி வாங்குவதற்காக வந்திருந்தனர். விற்பனைக் கூடக் கண்காணிப்பாளர் தர்மராஜ் முன்னிலையில் ஏலம் நடைபெற்றது.
மொத்தம் 6,268 மூட்டைகள் வரத்து இருந்தன. குவிண்டால் ரூ.5,100 முதல் ரூ.6,440 வரை விற்பனையானது. சராசரி விலையாக ரூ.5,900 இருந்தது. இவற்றின் விற்பனைத் தொகையான ரூ.ஒரு கோடியே 20 லட்சம் அந்தந்த விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டது.
கடந்த வாரத்தை விட 2 ஆயிரம் மூட்டைகள் வரத்து குறைந்திருந்தன. ஆனால், குவிண்டால் ஒன்றுக்கு ரூ.200 விலை உயர்ந்து இருந்ததாக, திருப்பூர் விற்பனைக் குழு முதுநிலைச் செயலாளர் பாலசந்திரன் தெரிவித்தார்.