உடுமலையை அடுத்துள்ள சோமவாரபட்டி நடுநிலைப் பள்ளியில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
இந்த பள்ளிக்கு கிராம மக்கள் சார்பில் கல்விச் சீர் வழங்கும் விழா கடந்த சில நாள்களுக்கு முன்பு நடைபெற்றது. இந்நிலையில், அரசு பள்ளிகளில் இந்த ஆண்டு முதல் எல்கேஜி மற்றும் யுகேஜி வகுப்புகள் தொடங்கப்பட உள்ளதையொட்டி மாணவர் சேர்க்கை குறித்த விழிப்பணர்வு முகாம் நடைபெற்றது.
இதையொட்டி முதல் வகுப்பில் சேர்க்கப்பட்டுள்ள குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்க வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது. நடுநிலைப் பள்ளியான இந்தப் பள்ளியில் எட்டாம் வகுப்பு முடிந்து செல்லும் மாணவர்கள் பெற்றோர்களுக்குப் பாத பூஜை செய்யும் நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது. நிறைவில் மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் கி.கோப்பெருந்தேவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.