வெள்ளக்கோவில் வட்டமலைக்கரை ஓடை அணை கோரிக்கை தொடர்பாக எழுத்துப்பூர்வ உறுதிமொழி அளித்த நாம் தமிழர் கட்சி வேட்பாளருக்கு ஆதரவு அளிக்க அணை பாசன சங்கத்தினர் முடிவு செய்துள்ளனர்.
ஈரோடு மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட வட்டமலைக்கரை ஓடை அணை பாசன நீரைப் பயன்படுத்துவோர் சங்கக் கூட்டம் உத்தமபாளையத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு சங்கத் தலைவர் பழனிசாமி தலைமை வகித்தார்.
இதில், வட்டமலைக்கரை ஓடை அணை கட்டி முடிக்கப்பட்டு 40 ஆண்டுகள் ஆகின்றன. போதிய நீர்வரத்து இல்லாத பகுதியில் கட்டப்பட்டதால் இதுவரை ஒரேஒரு முறை மட்டுமே பாசனத்துக்காக அணை திறக்கப்பட்டுள்ளது. பரம்பிக்குளம்-ஆழியாறு பாசன வாய்க்கால் மற்றும் அமராவதி ஆற்று உபரிநீர் திட்டம் மூலம் இந்த அணைக்குத் தண்ணீர் கொண்டு வர வேண்டும். இதனை நிறைவேற்ற எழுத்துப்பூர்வ உறுதிமொழி அளிக்கும் மக்களவைத் தொகுதி வேட்பாளர்களுக்கு தான் தங்களது ஆதரவு அளிப்போம் எனத் தெரிவித்திருந்தனர். இவர்களது கோரிக்கையை ஏற்று நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி உறுதிமொழிப் பத்திரத்தில் கையெழுத்துப் போட்டுத் தந்துள்ளார்.
இதையடுத்து, அவருக்கு மட்டும் ஆதரவு அளிப்போம் என சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.