கருகும் பயிரைக் காப்பாற்ற திருமூர்த்தி அணையில் இருந்து மூன்றாம் மண்டலத்துக்கு 4ஆம் சுற்றுத் தண்ணீர் திறந்து விட வேண்டும் என விவசாய சங்கத்தினர் ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்க நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமியிடம் திங்கள்கிழமை அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
பரம்பிக்குளம்- ஆழியாறு பாசனத் (பிஏபி) திட்டத்தில் திருமூர்த்தி அணையில் இருந்து மூன்றாம் மண்டலத்துக்கு 4 ஆம் சுற்றுத் தண்ணீர் திறக்க அணையில் போதுமான அளவுக்கு மேல் தண்ணீர் இருந்தும் பொதுப் பணித் துறை அலுவலர்கள் தண்ணீர் திறக்க காலதாமதம் செய்கின்றனர்.
இதனால், பி.ஏ.பி. தண்ணீரை நம்பி பயிரிடப்பட்டுள்ள வெங்காயம் உள்ளிட்ட காய்கறிப் பயிர்கள் அதிகப்படியான வெயில் காரணமாகவும், தண்ணீர் இல்லாததாலும் கருகும் நிலையில் உள்ளன.
எனவே, போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து கருகும் பயிர்களைக் காப்பாற்ற மூன்றாம் மண்டலத்துக்கு 4 ஆம் சுற்றுத் தண்ணீரை உடனடியாக திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.