பின்னலாடைத் தொழிலைப் பாதுகாக்க திருப்பூரில் தேசிய பின்னலாடை வாரியம் அமைக்கப்படும் என்று அத்தொகுதி அதிமுக வேட்பாளர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் தெரிவித்துள்ளார்.
திருப்பூர் மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் தேர்தல் பிரசாரத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டார். அப்போது, பிரசாரத்தின் இறுதியாக மாநகராட்சி முன்பாக நடைபெற்ற வாகனப் பிரசாரத்தின்போது அவர் பேசியதாவது:
திமுக ஆட்சியின்போது அழிந்து விடும் நிலையில் இருந்த திருப்பூர் பின்னலாடைத் தொழிலையும், லட்சக்கணக்கான தொழிலாளர்களின் எதிர்காலத்தையும் பாதுகாத்தது மறைந்த முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசுதான். தற்போது, ரூ. 25 ஆயிரம் கோடி அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் திருப்பூர் தொழில் நகரம் ரூ.100 கோடி அந்நியச் செலவாணியை ஈட்ட நாங்கள் துணை நிற்போம். மேலும், பின்னலாடை கூட்டமைப்புகளை ஒருங்கிணைத்து திருப்பூரில் தேசிய பின்னலாடை வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். உள்நாட்டு வணிகத்தை மேம்படுத்தும் வகையில் ஜவுளிச் சந்தை அமைக்கப்படும். பின்னலாடை ஏற்றுமதியாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையான கோவை விமான நிலையத்தை கார்கோ வசதியுடன் கூடிய பன்னாட்டு விமான நிலையமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், மத்திய அரசு உதவியுடன் திருப்பூரில் உள்ள லட்சக்கணக்கான தொழிலாளர்களுக்கு வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இந்தப் பிரசாரத்தில், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் சு.குணசேகரன் (திருப்பூர் தெற்கு), கே.என்.விஜயகுமார் (திருப்பூர் வடக்கு) மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.