உரிமையாளர் வீட்டில் 20 பவுன் நகைகள், ரூ. 45 ஆயிரம் ரொக்கத்தைத் திருடிய பணிப் பெண் கைது செய்யப்பட்டார்.
திருப்பூர் சத்யா நகரில் வசித்து வருபவர் சையத் அன்சாரி (62). இவரது வீட்டில் பி.கே.ஆர். காலனியைச் சேர்ந்த ரேஷ்மா (38) வேலை செய்து வந்தார். இந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் 3 ஆம் தேதி தனது மகனுக்கு உடல்நிலை சரியில்லை எனக் கூறிவிட்டு ரேஷ்மா சென்றுள்ளார். அதன் பிறகு அவர் வேலைக்கு வரவில்லை. இந்நிலையில், வீட்டின் பீரோ சாவியும் காணாமல்போனது தெரியவந்தது. பீரோவை உடைத்துப் பார்த்தபோது அதில் வைத்திருந்த 20 பவுன் நகைகள், ரூ. 45 ஆயிரம் திருடுபோனது தெரியவந்தது. இது தொடர்பாக சையத் அன்சாரி கொடுத்த புகாரின்பேரில் திருப்பூர் தெற்கு காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியதில், நகைகள், பணத்தை ரேஷ்மா திருடியதாகத் தெரியவந்தது. போலீஸார் அவரைக் கைது செய்து 4 பவுன் நகையைப் பறிமுதல் செய்தனர்.