திருப்பூரில் குப்பைகளை அகற்றக்கோரி மக்கள் பாதுகாப்பு அமைப்பினர் குப்பைக்குள் அமர்ந்து புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் மாநகராட்சி 9 ஆவது வார்டுக்கு உள்பட்ட எஸ்.வி.காலனி பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதியில் அதிக அளவில் பின்னலாடை நிறுவனங்கள், பள்ளிகள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் உள்ளன. இந்தப் பகுதியில் கொட்டப்படும் குப்பைகளை மாநகராட்சி ஊழியர்கள் சரிவர எடுப்பதில்லை. இதனால் குப்பைத் தொட்டிகள் நிரம்பி வழிவதுடன் அதன் அருகிலேயே குப்பைகள் கொட்டப்படுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.
எனவே, குப்பைகளை அகற்றும்படி அப்பகுதி பொதுமக்கள் சார்பில் மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த நிலையில், மக்கள் பாதுகாப்பு அமைப்பின் தலைவர் கார்மேகம் தலைமையில் அப்பகுதி மக்கள் குப்பைகளுக்குள் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.
இதுகுறித்த தகவலறித்து சம்பவ இடத்துக்கு வந்த மாநகராட்சி அதிகாரிகள் குப்பைகள் அகற்ற உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.
இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.