விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, பல்லடம் அருகே பல்வேறு விதமான வடிவங்களில் விநாயகர் சிலை தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா வரும் செப்டம்பர் 2 ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இதை முன்னிட்டு பொங்கலூர் ஒன்றியம், அலகுமலையில் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது.
வெளியூரைச் சேர்ந்த சிற்ப கலைஞர்கள் இங்கு தங்கி சிலை தயாரிப்பில் ஈடுபட்டுள்ளனர். சிலை தயாரிப்புப் பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. தற்போது சிலைகளுக்கு வர்ணம் பூசும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
கடந்த ஆண்டு ஜல்லிக்கட்டை சிறப்பிக்கும் வகையில் ஜல்லிக்கட்டு விநாயகர் சிலைகள் வடிவமைக்கப்பட்டன. இந்த ஆண்டு புதிதாக "மோட்டார் சைக்கிளில் விநாயகர் சிலை' தயார் செய்யப்பட்டுள்ளது.
சிங்கமுகன், அனுமன், கருட விநாயகர், முருகன் -பார்வதி- சுப்ரமணியர்- சிவன்- விநாயகர் குடும்பத்துடன் இருக்கும் சிலை, ரதத்தில் விநாயகர், ராஜ அலங்காரத்தில் விநாயகர், நரசிம்மன், பாகுபலி, நந்தி, மயில் வாகனங்களில் விநாயகர், தாமரை, மூஞ்சுறு, மான் விநாயகர் ஆகிய வடிவங்களில் விநாயகர் சிலைகள் தயார் செய்யப்பட்டுள்ளன. இச்சிலைகள் 3 அடி முதல் 12 அடி உயரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் ரசாயன கலவை இன்றி இயற்கை பொருள்களை கொண்டு சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத வகையில் தயாரிக்கப்பட்டுள்ளதாக சிலை வடிவமைப்பாளர்கள் தெரிவித்தனர்.