பல்லடம் நகராட்சியில் ரூ. 56.50 லட்சம் மதிப்பிலான வளர்ச்சி திட்டப் பணிகள் புதன்கிழமை துவக்கப்பட்டன.
பல்லடம் நகராட்சி ராயர்பாளையம் மீனாட்சி அவென்யூ, பெத்தாம்பாளையம் சாலை, பல்லடம் அரசு மருத்துவமனை, பெரியார் நகர், கதர் கடை ஆகிய பகுதிகளில் மழை நீர் வடிகால் கட்டுதல் மற்றும் பழுது பார்த்தல் பணி ரூ. 24லட்சத்து 40 ஆயிரம் மதிப்பிலும், மங்கலம் சாலை முதல் அந்தேரிக் கவுண்டர் தோட்டம் வரையும், சி.ஆர்.பிள்ளை லே அவுட், ஒழுங்கு முறை விற்பனைக் கூடம் பின்புறப் பகுதியில் ரூ. 32லட்சத்து 10 ஆயிரம் மதிப்பில் தார் சாலை புதுப்பித்தல் பணியும் நடைபெறவுள்ளது.
இப்பணியை பல்லடம் சட்டப்பேரவை உறுப்பினர் கரைப்புதூர் ஏ.நடராஜன் பூமி பூஜை செய்து புதன்கிழமை துவக்கி வைத்தார். அதேபோல் அனுப்பட்டியில் 4.50 ஹெக்டேர் நிலப்பரப்பில் உள்ள ஊர் குட்டையில் ரூ. 3லட்சத்து 50ஆயிரம் மதிப்பில் குடிமராமத்துப் பணி, பூமலூர் ஊராட்சி சின்னியம்பாளையம்புதூரில் ரூ. 9.80 லட்சம் மதிப்பில் மேல்நிலைத் குடிநீர் தொட்டி, ஆழ்துளை கிணறு, பள்ளிபாளையம் லட்சுமி நகரில் ரூ. 6.50 லட்சம் மதிப்பில் மேல்நிலை குடிநீர்த் தொட்டி, 63 வேலம்பாளையத்தில் ரூ. 8 லட்சத்தில் தரைமட்டத் தொட்டி ஆகியவற்றை மக்கள் பயன்பாட்டுக்கு பல்லடம் சட்டப்பேரவை உறுப்பினர் கரைப்புதூர் ஏ.நடராஜன் துவக்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் பல்லடம் நகராட்சி ஆணையர் சுரேஷ்குமார், பொறியாளர் சங்கர், சுகாதார ஆய்வாளர் சங்கர், பல்லடம் ஊராட்சி ஒன்றிய ஆணையர் பாலமுருகன், வட்டார வளர்ச்சி அலுவலர் பானுப்பிரியா, கூட்டுறவு வங்கித் தலைவர்கள் ஏ.சித்துராஜ், ஏ.எம்.ராமமூர்த்தி, அதிமுக நிர்வாகிகள் தண்ணீர்பந்தல் நடராஜன், தர்மராஜன், தங்கவேல் உள்பட பலர் பங்கேற்றனர்.