தாராபுரம் அருகே மடிக்கணினி வழங்கக்கோரி முன்னாள் மாணவர்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தாராபுரம் அருகே உள்ள தளவாய்பட்டணத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் 2017- 2018 ஆம் ஆண்டு பிளஸ் 2 முடித்த மாணவ, மாணவிகளுக்கு இதுவரையில் தமிழக அரசின் இலவச மடிக்கணினி வழங்கப்படவில்லை. இந்த நிலையில், முன்னாள் மாணவர்கள் 50-க்கும் மேற்பட்டோர் தளவாய்பட்டணம் அரசு மேல்நிலைப் பள்ளியை முற்றுகையிட்டனர். பின் உடுமலை-தாராபுரம் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். தகவலறித்து அங்கு வந்த அலங்கியம் காவல் துறையினர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். மேலும் மாணவர்களின் கோரிக்கைகளை மனுவாக எழுதி தாராபுரம் சார் ஆட்சியரிடம் கொடுத்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர்.
இதன் பேரில் மாணவர்கள் தங்களது கோரிக்கை மனுவை பள்ளி தலைமை ஆசிரியர் உமாதேவியிடம் அளித்துவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியல் காரணமாக உடுமலை - தாராபுரம் சாலையில் சுமார் 30 நிமிடம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.