கல்லூரியில் மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு முகாம்
அவிநாசிபாளையம் ஜெய்ஸ்ரீராம் பொறியியல் கல்லூரியில் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
முகாமுக்கு கல்லூரி அறக்கட்டளை பொருளாளர் எம்.கோவிந்தசாமி, நிர்வாக அலுவலர் எஸ்.அன்பரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முதல்வர் சி.ரமேஷ்குமார் வரவேற்றார். முகாம் அவசியம் குறித்து கல்லூரி ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சித் துறை இயக்குநர் டி.சர்மிளா பேசினார். இதில் 860 மாணவிகள், 70 பேராசிரியைகள் பங்கேற்றனர். இதில், பிரிட்டன் ஹல் பல்கலைக்கழகத்தின் மார்பக புற்றுநோய் ஆராய்ச்சித் துறை மருத்துவர் அன்புசெல்வன் பேசியது:
இன்றைய சூழ்நிலையில் மார்பக புற்றுநோய் மிக கொடிய நோயாக பரவி வருகிறது. தமிழகம், கேரளம், தில்லி ஆகிய மாநிலங்களில் மார்பக புற்றுநோய் பாதிப்பு அதிகமாக உள்ளது. இதனை ஆரம்ப நிலையில் கண்டறிய முடியாததால் பெரும்பாலான பெண்கள் உயிரிழக்கின்றனர்.
அனைவரும் 6 மாதங்களுக்கு ஒரு முறை உடல் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். குறிப்பாக பெண்கள் தங்களது குடும்ப மருத்துவரிடம் உடல் நலன் குறித்து பரிசோதனை, கலந்தாய்வு செய்துகொள்ள வேண்டும். யோகா, உடற்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்றார். முடிவில் கணினித் துறை தலைவி டி.கலைச்செல்வி நன்றி கூறினார்.