உடுமலை ஒன்றியம், கண்ணமநாயக்கனூர் ஊராட்சியில் தனி நபரின் ஆக்கிரமிப்பில் உள்ள குட்டையை மீட்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கணக்கம்பாளையம் ஊராட்சி முன்னாள் தலைவர் ஆர்.கிட்டு (எ)கிருஷ்ணசாமி, விவசாயிகள் உள்ளிட்டோர் உடுமலை வட்டாட்சியர் கி.தயானந்தனிடம் புதன்கிழமை அளித்த மனுவில் தெரிவித்துள்ளதாவது:
உடுமலை வட்டம், கண்ணம்மநாயக்கனூர் ஊராட்சியில் உள்ள செங்கோடன் குட்டை சுமார் 50 ஏக்கர் பரப்பளவு கொண்டதாகும். இந்தக் குட்டை தனி நபரின் ஆக்கிரமிப்பில் இருந்து வருகிறது. இந்தக் குட்டையில் பொது ஆழ்துளைக் கிணறும், மயானமும் உள்ளன. ஆனாலும், இவற்றை பொதுமக்கள் யாரும் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. ஆக்கிரமிப்பாளர் குட்டையில் தென்னை மரங்களையும் வைத்து வளர்த்து வருகிறார். எனவே, பொதுக் குட்டையை மீட்டுத் தூர்வாரி, தண்ணீர் சேமித்து வைக்கவும், விவசாயிகள், பொதுமக் களுக்கு குடிநீர் ஆதாரத்தை ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.