அவிநாசி அருகே உள்ள பள்ளிபாளையத்தில் நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் 183 பயனாளிகளுக்கு ரூ.12.34 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வியாழக்கிழமை வழங்கப்பட்டது.
இம்முகாமுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் ஆர். சுகுமார் தலைமை வகித்தார். சார் ஆட்சியர் (பயிற்சி) விஷ்ணுவர்தினி முன்னிலை வகித்தார். திருப்பூர் வடக்கு வட்டாட்சியர் ஜெயக்குமார் வரவேற்றார்.
திருப்பூர் வடக்கு சட்டப்பேரவை உறுப்பினர் கே.என். விஜயகுமார் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதில் மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, வீட்டுமனைப் பட்டா, குடும்ப அட்டை என மொத்தம் 183 பயனாளிகளுக்கு ரூ.12 லட்சத்து 34 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
முகாமில், பள்ளிபாளையத்தில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் பாலத்தை திருமுருகன்பூண்டியில் இருந்து பெரியாயிபாளையம் செல்லும் வழியில் இடதுபுறமாக அகலப்படுத்தி சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்தனர். மனுவைப் பெற்றுக்கொண்ட எம்எல்ஏ கே.என்.விஜயகுமார் உடனடியாக பாலத்தை முறைப்படுத்தி சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இம்முகாமில் சமூகநலத் துறை, வேளாண்மைத் துறை, வருவாய்த் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த கண்காட்சி அங்குகள் அமைக்கப்பட்டிருந்தன.