பிஎஸ்என்எல் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய 7 மாத ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும் என தமிழ்நாடு தொலைத் தொடர்பு ஒப்பந்தத் தொழிலாளர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதுதொடர்பாக அந்த சங்கத்தின் மாவட்டச் செயலாளர் சண்முகசுந்தரம் திருப்பூரில் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:
பிஎஸ்என்எல் நிறுவனத்தில் துப்புரவுப் பணியில் இருந்து அலுவலகத்தில் கணினி இயக்குவது, களத்தில் கண்ணாடி இழை கேபிள்கள் பதிப்பது, இணைப்பது, இணைய சேவை உள்பட நவீன தகவல் தொடர்பு சார்ந்த அனைத்துப் பணிகளையும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் செய்து வருகின்றனர். நாடு முழுவதும் சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் உள்ளனர். தமிழகத்தில் 6 ஆயிரம் பேர் உள்ளனர்.
கோவை தொலைத் தொடர்பு வட்டத்தில் 450 பேர் பணியாற்றுகின்றனர். தமிழகத்தில் மட்டும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு கடந்த 7 மாதங்களாக ஊதிய பாக்கி ரூ.40 கோடி வழங்கப்படவில்லை. ஊதியம் வழங்கக் கோரி, பல்வேறு கட்டத் தொடர் போராட்டங்களையும் நடத்தியுள்ளோம். இருப்பினும் பிஎஸ்என்எல் நிர்வாகமும், மத்திய அரசும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
7 மாதங்களாக ஊதியம் வழங்கப்படாததால் மேற்கு வங்கத்தில் ஒப்பந்த தொழிலாளர்கள் 5 பேர் தற்கொலை செய்து கொண்டனர். இங்கும் எங்களது அன்றாட வாழ்க்கை பெரும் போராட்டமாக உள்ளது. எனவே ஊதிய நிலுவைத் தொகையை உடனடியாக விரைந்து வழங்க வேண்டும் என்றார்.
இந்த சந்திப்பின்போது சங்கத்தின் மாநில உதவிச் செயலாளர் முத்துக்குமார், மாநில செயற்குழு உறுப்பினர் ரமேஷ், கிளைச் செயலாளர் அருண் தேவசகாயம், கிளைத் தலைவர் கனகராஜ் உள்ளிட்டோர்
உடனிருந்தனர்.