உயர் மின் கோபுர திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்லடம் அருகே உள்ள வாவிபாளையத்தில் விவசாயிகள் வெள்ளிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். வாவிபாளையம், வடமலைபாளையம் ஊராட்சி பகுதியில் உயர் மின் கோபுர பாதை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி விவசாயிகள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். பவர்கிரிட் நிறுவனத்தினர் இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமையும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நிலம் அளவீடு செய்யும் பணியை மேற்கொண்டனர்.
இப்பணிக்கு எதிர்ப்பு தெரிவித்தும், பாதிப்படையும் விவசாயிகளுக்கு வெளிச்சந்தை மதிப்பில் நான்கு மடங்கு இழப்பீட்டு தொகை வழங்க கோரியும், திரளான விவசாயிகள் வாவிபாளையம் - கொடுவாய் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வாவிபாளையம் ஊராட்சி முன்னாள் தலைவர் பார்த்தசாரதி, உழவர் உழைப்பாளர் கட்சி மாவட்ட நிர்வாகிகள் வெங்கடாசலம், சோமசுந்தரம், சங்கம் சுரேஷ், அரிமா சங்கத் தலைவர் ஈஸ்வரன் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.
தகவலறிந்த திருப்பூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் குணசேகரன், பல்லடம் டி.எஸ்.பி. (பொறுப்பு) பரமசாமி, பல்லடம் வட்டாட்சியர் சாந்தி உள்ளிட்டோர் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது இப்பிரச்சனை குறித்து மாவட்ட ஆட்சியர் மூலம் அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று தீர்வு காணப்படும் என உறுதி அளித்தனர். அதைத் தொடர்ந்து விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.