மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த தொழிலாளியின் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என தொமுச கோரிக்கை விடுத்துள்ளது.
திருப்பூர் பி.என். சாலை, நெசவாளர் காலனி அரசு உயர்நிலை பள்ளியில் சிறப்பு குறைதீர்க்கும் முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், திருப்பூர் மாவட்ட அமைப்புசாரா மற்றும் கட்டுமானத் தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் செயலாளர் அ.சரவணன், நிர்வாகிகள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
திருப்பூர் மின்வாரியத்தில் தொடர்ந்து பல்வேறு இடங்களில் பொதுமக்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படும் வகையில் உள்ள மின் கம்பம், கம்பிகள், மின் இணைப்புகள் குறித்து பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில், மின்சாரம் பாய்ந்து கடந்த 10 மாதங்களில் 5 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். இதில் திருப்பூர், போயம்பாளையத்தைச் சேர்ந்த சந்திரன் (எ) ராஜா மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார். அவரது குடும்பத்துக்கு நிவாரணம் வழங்கக் கோரி கடந்த மார்ச் மாதம் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. இது வரையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, உடனடியாக நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனர்.